இன்பங்களால் திரையிடப்பட்ட நரகம் சிரமங்களால் திரையிடப்பட்ட சொர்க்கம் | Tamil bayan - 697
இன்பங்களால் திரையிடப்பட்ட நரகம் சிரமங்களால் திரையிடப்பட்ட சொர்க்கம்
ஜுமுஆ குத்பா தலைப்பு : இன்பங்களால் திரையிடப்பட்ட நரகம் சிரமங்களால் திரையிடப்பட்ட சொர்க்கம்
வரிசை : 697
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 09-07-2021 | 29-11-1442
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்தவனாகவும், அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்த தூதருடைய குடும்பத்தார் மீதும், தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக,
வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வுடைய அடியாரும், தூதருமாவார் என்று சாட்சி கூறியவானாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை நினைவூட்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா. நமது பாவங்களை மன்னிப்பானாக! அல்லாஹு தஆலா யாருக்கு நற்பாக்கியத்தை எழுதினானோ, இம்மை மறுமையின் வெற்றியை யாருக்கு முடிவு செய்தானோ அத்தகைய நல்லோரில் என்னையும் உங்களையும் முஃமினான முஸ்லீமான சகோதர சகோதரிகள் அனைவரையும் ஆக்கி அருள்வானாக என்று அல்லாஹ்விடத்தில் துஆ செய்து கொள்கிறேன்.
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நம் அனைவருக்கும் தீன்படி நடக்கக்கூடிய பாக்கியத்தை தருவானாக! ஆமீன்.
ஒரு மனிதன் எந்த அளவு அல்லாஹ்வை பயப்படுவானோ, ஒரு மனிதன் எந்த அளவு மறுமையை நினைத்தவனாக, சொர்க்கத்தையும் நரகத்தையும் நினைத்தவனாக, சொர்க்கத்தை ஆசைப்பட்டவனாக, நரகத்தை பயந்தவனாக வாழ்கிறானோ அந்த அளவு அவனுக்கு மார்க்கம் இலகுவாக இருக்கும்.
யார் அல்லாஹ்வை பயப்படவில்லையோ, யார் மறுமையை, சொர்க்கத்தை, நரகத்தை, நினைக்கவில்லையோ, யார் சொர்க்கத்தை ஆசை படவில்லையோ, நரகத்தை பயப்படவில்லையோ, அல்லாஹ்விற்கு முன்னால் நின்று, தான் விசாரிக்கப்படுவேன் என்ற எண்ணம் யாருக்கு இல்லையோ, அவர்களுக்கு இந்த மார்க்கம் மிகவும் கடினமாகத் தோன்றும்.
இதனால் மார்க்கத்தின் ஒவ்வொரு சட்டங்களிலும் கூட, அவர்கள் குறைகளை தேடுவார்கள். அவர்களுடைய சுதந்திரங்களை மார்க்கம் பறிப்பதாக, அவர்களுடைய ஆசைகளை எல்லாம் அடக்கி விடுவதாக இந்த மார்க்கத்தை பார்த்து தப்பான கணக்கு போடுவார்கள்.
ஒரு ஹதீஸை நாமெல்லாம் அதிகமாக நினைவு கூற வேண்டும். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:
«الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ، وَجَنَّةُ الْكَافِرِ»
இந்த துன்யா மூஃமின்களுக்கு சிறைச்சாலை ஆகும். இந்த துன்யா காஃபிர்களுக்கு சொர்க்கமாகும்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2956.
இந்த ஹதீஸிற்கு அறிஞர்கள் விளக்கம் கூறுகிறார்கள்: சிறைச்சாலையில் இருப்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம். ஒரு மூஃமினை பொறுத்தவரை இந்தத் துன்யா உடைய வாழ்க்கை, அதிகக் கட்டுப்பாடுகள் உடையது. காஃபிர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.
அவர்கள் ஒன்றை மதமாக, கொள்கையாக, சமயமாக, தங்களுடைய கோட்பாடாக எண்ணினாலும் கூட, அவர்களால் தாங்கள் முன்பு நம்பிய கொள்கைகளை மாற்றிக்கொள்ள முடியும். தங்களுடைய மதத்தில் அவர்கள் ஆல்ட்ரேஷன் செய்துகொள்ள முடியும்.
ஹலாலை ஹராம் ஆக்க முடியும். ஹராமை ஹலால் ஆக்கிக்கொள்ள முடியும். எதை வேண்டுமானாலும் அவர்கள் கொள்கையில் செய்து கொள்ளலாம்.
அவர்களுடைய பண்டிதர்கள் குருமார்கள் என்ன சொல்கிறார்களோ, அதற்கேற்ப அவர்களுடைய கொள்கை, சமயம், நம்பிக்கை, கோட்பாடு மாறிக்கொண்டே இருக்கும்.
ஆனால், அல்லாஹ் நமக்கு இறக்கிய இந்த இஸ்லாமிய தீனில் அது முடியாது. அல்லாஹ்வுடைய சட்டம் அல்லாஹ்வுடைய மார்க்கம் பூர்த்தியாகிவிட்டது.
وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
(நபியே!) உமது இறைவனின் வாக்கு உண்மையாகவும் நீதமாகவும் முழுமையாகி விட்டது. அவனுடைய வாக்குகளை மாற்றுபவன் யாருமில்லை. அவன் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 6 : 115)
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் குஃப்பார்கள் கேட்டார்கள்:
நபியே! இந்த குர்ஆனை கொஞ்சம் ஆல்ட்ரேஷன் செய்து கொடுங்கள். வேறு ஒரு குர்ஆனை எங்களுக்கு கொண்டு வாருங்கள் என்று.
அதற்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: இதை நான் என் புறத்திலிருந்து கூறியிருந்தால், நான் இதில் மாற்றம் செய்து இருப்பேன். இதுவோ, அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கப்படுகிறது. இதை மாற்றுவதற்கு எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? (அல்குர்ஆன் கருத்து 10 : 15)
நம்முடைய தீன் வரையறுக்கப்பட்ட, ஒரு ஒழுங்குமுறை படுத்தப்பட்ட, அல்லாஹ்வால் இறக்கப்பட்ட சட்டங்கள் வகுக்கப்பட்ட மார்க்கமாகும்.
இந்த மார்க்கத்தை பின்பற்றுவதில் நமது சில விருப்பங்களைத் தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். சில சௌகரியங்களை விட வேண்டிய நிலை ஏற்படலாம். நம்முடைய ஆசைகளில் பலவற்றை இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்; நாம் எதையெல்லாம் இழக்கிறோமோ, அல்லாஹ்வுடைய இந்த தீனை கட்டுப்பாடோடு பின்பற்றுவதால், எதையெல்லாம் நாம் இழக்கிறோமோ, அவற்றில் எல்லாம் நமக்கு தீமைகளும், கெடுதிகளும் இருப்பதால்தான் அல்லாஹு தஆலா அவற்றை நமக்கு விலக்கி இருக்கிறான்.
நமக்கு கெடுதி இல்லாத தீமை இல்லாத பாதிப்பு இல்லாத ஒன்றை அல்லாஹ் நமக்கு விலக்கவில்லை, தடுக்கவில்லை,
எதை செய்யும்படி அல்லாஹு தஆலா நமக்குக் கட்டளையிட்டிருக்கிறானோ அதில் நம்முடைய இம்மைக்கும், மறுமைக்கும், இவ்வுலக வாழ்க்கைக்கும், மறுவுலக வாழ்க்கைக்கும், நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத, நம்முடைய அறிவுக்கு எட்டாத லட்சோபலட்ச நன்மைகள் இருக்கிற காரணத்தினால் தான், அல்லாஹ் அதை நம் மீது கட்டாயப்படுத்தி இருக்கிறான், நமக்கு சட்டமாக்கி இருக்கிறான், நமக்கு அவசிய படுத்தி இருக்கிறானே தவிர, நம்மை சிரம படுத்துவதற்காக அல்ல. நம்மை துன்புறுத்துவதற்காக அல்ல.
சட்டங்களைப் போட்டு நம்மை அடக்கி, நமக்கு வேதனை கொடுப்பதற்காக அல்ல. இந்த விஷயத்தை மூஃமின் நம்பிக்கை கொண்டாக வேண்டும். இந்த நம்பிக்கை ஒரு முஃமினுடைய உள்ளத்தில் ஆழமாக பதிய வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:
مَا كَانَ عَلَى النَّبِيِّ مِنْ حَرَجٍ فِيمَا فَرَضَ اللَّهُ لَهُ
அல்லாஹ் தனக்கு சட்டமாக்கிய ஒரு காரியத்தை நிறைவேற்றுவது நபி மீது குற்றமாகாது. (அல்குர்ஆன் 33 : 38)
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ
உங்களுக்கு அல்லாஹ் இலகுவை நாடுகிறான். சிரமத்தை அல்லாஹ் உங்களுக்கு விரும்பவே மாட்டான். (அல்குர்ஆன் 2 : 185)
அல்லாஹ் மிக்க கருணையாளன். நமக்கு அனுப்பப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நம் மீது மிகவும் பேராசை உள்ளவர்கள். நமக்கு சிரமமானது அவர்களுடைய மனதுக்கு வலி தரக்கூடியதாக இருக்கும். அத்தகைய இரக்கம் உடையவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
பல ஹதீஸ்களை நீங்கள் பார்க்கலாம். நான் எனது உம்மத்திற்கு சிரமம் கொடுத்து விடுவேன் என்ற பயம் மட்டும் எனக்கு இல்லை என்றால், நான் அவர்களுக்கு இதை சட்டமாக்கியிருப்பேன் அதை சட்டமாக்கி இருப்பேன் என்று பல விஷயங்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு உணர்த்தி இருக்கிறார்கள்.
நமக்கு சிரமமாகி விடும் என்ற ஒரே பயத்தினால் பல விஷயங்களை ஃபர்ளாக்காமல், விருப்பத்திற்கேற்ப என்று விட்டுவிட்டு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சென்றிருக்கிறார்கள்.
தராவிஹ் உடைய தொழுகை மிஸ்வாக் செய்தல் இப்படி ஒவ்வொரு அமல்களையும் உதாரணமாக நாம் சொல்லலாம்.
பார்க்க : நூல் : புகாரி -887, அபூதாவூத் – 1313.
இந்த உலகம் இதனுடைய ஆசாபாசங்களுக்கு பின்னால் இதனுடைய அலங்காரங்களுக்கு பின்னால் நரகம் மறைந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இதில் நாம் அல்லாஹ்வுடைய சட்டங்களை, மார்க்க ஒழுக்கங்களை பின்பற்றும் பொழுது என்ன சிரமங்களை அனுபவிக்கிறோமோ அந்த சிரமங்களுக்கு பின்னால் சொர்க்கம் மறைந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
«حُجِبَتِ النَّارُ بِالشَّهَوَاتِ، وَحُجِبَتِ الجَنَّةُ بِالْمَكَارِهِ»
நரகம் மனிதர்கள் விரும்பக்கூடிய ஆசைகளைக் கொண்டு, இச்சைகளை கொண்டு, விருப்பங்களை கொண்டு மறைக்கப்பட்டுள்ளது.
சொர்க்கம் நஃப்ஸுக்கு பிடிக்காத சிரமமான விஷயங்களைக் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6487.
ஒன்றை நஃப்ஸு சீக்கிரமாக விரும்புகிறது என்றால், உடனே நாம் அங்கே சந்தேகப்பட வேண்டும். ஒன்றை நஃப்ஸு உடனே ஏற்றுக் கொள்கிறது, ஒன்றின் பக்கம் நம்மை அழைக்கிறது என்றால் உடனே நாம் அங்கே நிதானிக்க வேண்டும்.
என்னுடைய நஃப்ஸ் என்னை ஒரு பாவத்தின் பக்கம் தூண்டுகிறதோ, ஒரு தீமையின் பக்கம் அழைக்கிறதோ, ஒரு கெட்டதை எனக்கு அலங்கரிக்கிறதோ என்ற பயம் வேண்டும்.
அல்லாஹு தஆலா எந்த நபியைப் பார்த்து, இவர் எனக்காக நான் தேர்ந்தெடுத்த, பரிசுத்தமாக்கப்பட்ட நபிமார்களில் ஒருவர் என்று அல்லாஹு தஆலா சாட்சி கூறினானோ அந்த யூசுப் நபி அவ்வளவு பயந்தார்கள்.
தன்னைப்பற்றி அவர்கள் கூறினார்கள்:
وَمَاۤ اُبَرِّئُ نَفْسِىْ اِنَّ النَّفْسَ لَاَمَّارَةٌ بِالسُّوْٓءِ اِلَّا مَا رَحِمَ رَبِّىْ
‘‘நான் (தவறுகளிலிருந்து) தூய்மையானவன்'' என்று என்னை பரிசுத்தம் செய்து கொள்ளவில்லை. ஏனென்றால், என் இறைவன் அருள் புரிந்தாலன்றி மனிதனின் சரீர இச்சை, பாவம் செய்யும்படித் தூண்டக்கூடியதாகவே இருக்கிறது. (அல்குர்ஆன் 12 : 53)
இறைத்தூதர்களே பயந்தார்கள் என்றால், அல்லாஹ்விடத்தில் இதிலிருந்து பாதுகாப்புத் தேடினார்கள் என்றால், நாம் எந்த அளவு பாதுகாப்பு தேடவேண்டும்.
எத்தனை துஆக்கள் இருக்கின்றன!
أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي
யா அல்லாஹ்! என்னுடைய நஃப்ஸின் தீங்கிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாதுகாப்புத் தேடினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3392.
இந்த நஃப்ஸானது, ஒன்று இது அல்லாஹ்வுக்கு பணியக் கூடிய நஃப்ஸாக இதை நாம் மாற்ற வேண்டும். அப்படி இல்லாமல் இந்த நஃப்ஸ் அதனுடைய ஆசையுடனே இது விடப்படுமேயானால் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் நரகம் படுகுழியில் தள்ளிவிடும். அல்லாஹ்வுடைய கோபத்தில் தள்ளிவிடும். மார்க்கத்தை விட்டு ஒரு மனிதனை வெளியேற்றுவதற்குண்டான எல்லா வேலைகளையும் அது செய்து விடும்.
இந்த தீன் என்பது சாதாரணமானதல்ல. அல்லாஹ்வுடைய தீனுடைய அருமையை புரிந்தவர்களுக்கு தான் இந்த நஃப்ஸை அடக்கக் கூடிய, இந்த நஃப்ஸுடைய ஆசைகளை அடக்க கூடிய வலிமை கிடைக்கும்.
இதற்கு உதாரணம் எப்படி என்றால், ஒரு குழந்தை ஒன்றை பிரியப்பட்டு கையில் பிடித்திருக்குமேயானால், அதனிடம் இருந்த அந்தப் பொருளைப் பிடுங்கினால், அந்தக் குழந்தை எப்படி கதறும்! எப்படி பரிதவிக்கும்! அப்படித்தான் இந்த நஃப்ஸ்.
அதற்க்குப் பிரியமான ஒரு காரியத்தில் இருந்து அந்த நஃப்ஸை திருப்புவது என்றால், அந்த நஃப்ஸ் சாதாரணமாக விட்டுக் கொடுக்காது.
இசையில் அடிமையானவர்கள், ஆடல் பாடல்களில் அடிமையானவர்கள், அந்நியப் பெண்களோடு பழகி அடிமையானவர்கள், இப்படி எத்தனை பாவங்கள்!
மக்களை காயப்படுத்துவது. புறம் பேசுவது, பிறருடைய கண்ணியத்தில் விளையாடுவது, பொது சொத்துக்களை கையாடல் செய்வது, இப்படியாக பாவங்களில் இந்த நஃப்ஸ் மூழ்கி, அதில் சுகம் கண்டு விடுகிறதோ, அது மிகக் கடுமையான நிலை. அந்த நஃப்ஸால் அந்தத் தீமையில் இருந்து விலகுவது என்பது மிகப்பெரிய போராட்டமாக இருக்கும்.
ஆனால், ஒன்றே ஒன்று, அல்லாஹ்வுடைய பயம் மற்றும் மறுமை என்ற உணர்வை அடியான் உள்ளத்தில் கொண்டு வந்து விடுவேனாயானால் அந்த நஃப்ஸ் அப்படியே சிறுமைப் பட்டு விடும். அதனுடைய அத்தனை சூழ்ச்சிகளும் அப்படியே ஒன்றும் இல்லாமல் உருகிப் போய் விடும்.
தக்வா உள்ளத்தில் இறங்காத வரை, அல்லாஹ்வுடைய பயம், மறுமையினுடைய பயம், சொர்க்கத்தின் ஆசை, நரக நெருப்பின் மீது உண்டான பயம் உள்ளத்தில் இறங்காத வரை நஃப்ஸுடைய ஆசையை விடுவது என்பது சாதாரணமான ஒன்றாக இருக்காது.
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா பல வசனங்களில் சொல்கின்றான்.
அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் என்று சொல்லுகின்ற அல்லாஹு தஆலா நரக நெருப்பை பயந்து கொள்ளுங்கள் என்றும் சொல்கின்றான். நரகத்தின் நெருப்பை பயந்து கொள்ளுங்கள் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.
பார்க்க – (அல்குர்ஆன் 3 : 50, 5 : 100, 64 : 16)
அந்த நரக நெருப்பு உடைய கடுமை எத்தகையது என்பதை உள்ளத்தில் கொண்டு வரும் பொழுது தான் நம்முடைய ஆசைகளை நாம் வெல்ல முடியும். நம்முடைய நஃப்ஸை நாம் ஜெயிக்க முடியும்.
நம்முடைய ஆசைகளுக்கு ஒரு பலூனை உதாரணமாக சொல்லலாம். அது ஊத ஊத பெரிதாகத் தெரியும். ஆனால் அதில் ஒன்றும் இல்லாததை போன்று. அப்படித்தான் நாம் இந்த உலகத்தில் ஆசைப்படக் கூடிய ஆசைகள். அந்த ஆசை பெரியதாக தெரியும். ஆனால், அதனுடைய முடிவு அல்லாஹு தஆலா சொல்வதைப் போல,
قُلْ مَتَاعُ الدُّنْيَا قَلِيلٌ
உலகத்தில் இன்பம் அற்பமானது. (அல்குர்ஆன் 4 : 77)
இன்னும் பல இடங்களில் அலங்கரிக்கப்பட்ட இந்த உலக வாழ்க்கைக்கு காய்ந்த சருகுகளை குப்பைகளை அல்லாஹு தஆலா உதாரணமாக சொல்கின்றான். (அல்குர்ஆன் 18 : 45)
ஸஹீஹ் முஸ்லிமில் ஒரு அறிவிப்பு வருகிறது. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
நாளை மறுமை நாளில் இந்த உலகத்திலேயே மிக சுகபோகமாக வாழ்ந்த ஒரு மனிதனை கொண்டு வரப்படும். அவனுக்கு இந்த உலகில் எந்த ஒரு சிரமமும் கஷ்டமும் இருந்திருக்கிறாது. அல்லாஹு தஆலா மலக்குகளுக்கு கட்டளையிடுவான். அந்த மலக்கு அவனை அப்படியே எடுத்து நரகத்தில் ஒரு முக்கு முக்கி எடுத்து வெளியே கொண்டு வருவார்.
அப்பொழுது அந்த மனிதனிடத்தில் கேட்கப்படும்; நீ உன் உலக வாழ்க்கையில் ஏதாவது இன்பங்களை பார்த்திருக்கிறாயா? என்று.
அவன் கூறுவான்: நான் எந்த சுகத்தையும் அனுபவித்தது இல்லையே, எந்த சுகத்தையும் கண்டது இல்லையே என்று.
மேலும், இன்னொருவரைப் பற்றி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லுகிறார்கள்:
இந்த உலகத்திலேயே அதிகமான துன்பத்தை அனுபவித்த ஒரு மனிதனைக் கொண்டு வரப்படும். அவன் வாழ்க்கையில் எந்த சுகத்தையும் கண்டிருக்க மாட்டான். எல்லா வகையிலும் சிரமத்தை மட்டுமே பார்த்துவிட்டு வந்த மனிதனை மறுமையில் கொண்டு வரப்படும். அவனோ ஈமான் உடையவனாக, சொர்க்கவாசியாக இருப்பான்.
அல்லாஹு தஆலா மலக்குக்கு கட்டளையிடுவான். அந்த மலக்கு அவரை அப்படியே சொர்க்கத்திற்குள் வைத்து எடுத்து விடுவார். அல்லாஹு தஆலா அந்த அடியார் இடத்தில் கேட்பான். அடியானே! வாழ்க்கையில் உனக்கு ஏதாவது பிரச்சினைகள், துன்பங்கள் ஏற்பட்டிருக்கிறதா என்று?
அதற்கு அந்த அடியான் சொல்வான்: அல்லாஹ்! நான் எந்த சிரமத்தையும் பார்த்தது இல்லை என்று. (1)
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2807.
சொர்க்கத்திற்க்கு ஒருமுறை சென்று வந்தது, இந்த உலகத்தினுடைய அத்தனை துன்பங்களையும், துயரங்களையும், கஷ்டங்களையும், சிரமங்களையும், வேதனைகளையும், வலிகளையும், பிரச்சினைகளையும் நமக்கு மறக்க வைத்து விடுகிறது என்றால், அந்த சொர்க்கமே ஒருவருக்கு தங்குமிடமாக ஆகிவிட்டால்!
அல்லாஹு தஆலா அழகாக சொல்லுகிறான்:
فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ (6) فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ
எவருடைய (நன்மையின்) எடை கனத்ததோ, அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பார். (அல்குர்ஆன் 101 : 6,7)
அப்படிப்பட்ட மறுமைக்காக அந்த சொர்க்கத்திற்காக இந்த உலகத்தில் சில இழப்புகளை சில சிரமங்களை நாம் ஏன் தாங்கிக் கொள்ளக் கூடாது? ஏன் சில கட்டுப்பாடுகளை நாம் பின்பற்றி விடக்கூடாது.?
அந்தக் கட்டுப்பாடுகளுக்கு பின்னால் சொர்க்கம் மறைந்திருக்கிறது. அந்த சட்டங்களுக்கு பின்னால், சொர்க்கம் மறைந்திருக்கிறது.
நாம் விரும்பக்கூடிய ஆசைகள், இச்சைகள், மன விருப்பங்கள் ஒரு மிருகத்தைப் போன்று. ஒரு மனிதன் அவற்றை அடைய நினைக்கும் பொழுது, அதற்குப் பின்னால் நரகம் மறைந்திருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.
ஆகவே, எத்தனை நெருக்கடிகள் ஏற்பட்டாலும், இகழ கூடியவர்களும், தூற்ற கூடியவர்களும் நமக்கு இன்னல் தரக்கூடியவர்களும் எவ்வளவு தான் அதிகமாகி விட்டாலும் சரி, ஒரு முஃமின் அவனுடைய மார்க்கத்தில் முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும். அதில் அவனுக்கு உறுதியும் பிடிப்பும் ஏற்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
சோதனைகள் அவனுக்கு அல்லாஹ்வுடைய நெருக்கத்தையும், மார்க்கப் பற்றையும், மறுமை நம்பிக்கையும் அதிகப்படுத்த வேண்டுமே தவிர, அவனுடைய உள்ளத்தில் பலவீனத்தை தடுமாற்றத்தை ஏற்படுத்தி விடக்கூடாது.
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நமக்கு அத்தகைய உறுதியான ஈமானை இக்லாஸை யக்கீனை தருவானாக!
அல்லாஹ்வுடைய தீனை அதிகம் அறிந்து பின்பற்றி, அதைப் பிற மக்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய மிக முக்கிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். அதை சிறப்பாக செய்வோமேயானால், கண்டிப்பாக அல்லாஹ்வுடைய உதவி நமக்கு இருக்கிறது.
وَلَيَنْصُرَنَّ اللَّهُ مَنْ يَنْصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ
எனக்கு உதவி செய்பவருக்கு சத்தியமாக நான் உதவி செய்வேன். என்னைவிட வலிமை உடையவர்கள் யார் இருக்கிறார்கள்? நான் அனைவரையும் மிகைத்தவன். (அல்குர்ஆன் 22 : 40)
என்று அல்லாஹு தஆலா நமக்கு ஆறுதல் தருகிறான். நமக்கு மன உறுதி தருகிறான். அல்லாஹ்வை நம்புவோமாக! அல்லாஹ்வின் பக்கம் சார்ந்திருப்போமாக! கண்டிப்பாக அல்லாஹ்வுடைய உதவி நமக்கு நெருக்கமாக இருக்கிறது.
اِنَّ رَحْمَتَ اللّٰهِ قَرِيْبٌ مِّنَ الْمُحْسِنِيْنَ
அல்லாஹ்வுடைய கருணை நல்லவர்களுக்கு மிக அருகாமையில் இருக்கிறது. (அல்குர்ஆன் 7 : 56)
அல்லாஹ்வுடைய உதவியும் அல்லாஹ்வுடைய வெற்றியும் எப்போதும் குவிந்திருக்கிறது. சமீபமாக இருக்கிறது என்று அல்லாஹு தஆலா நமக்கு வாக்குறுதி தருகிறான்.
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நம்மை பொருந்திக் கொள்வானாக! நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! தீனில் நம்மை உறுதிப்படுத்துவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يُؤْتَى بِأَنْعَمِ أَهْلِ الدُّنْيَا مِنْ أَهْلِ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ، فَيُصْبَغُ فِي النَّارِ صَبْغَةً، ثُمَّ يُقَالُ: يَا ابْنَ آدَمَ هَلْ رَأَيْتَ خَيْرًا قَطُّ؟ هَلْ مَرَّ بِكَ نَعِيمٌ قَطُّ؟ فَيَقُولُ: لَا، وَاللهِ يَا رَبِّ وَيُؤْتَى بِأَشَدِّ النَّاسِ بُؤْسًا فِي الدُّنْيَا، مِنْ أَهْلِ الْجَنَّةِ، فَيُصْبَغُ صَبْغَةً فِي الْجَنَّةِ، فَيُقَالُ لَهُ: يَا ابْنَ آدَمَ هَلْ رَأَيْتَ بُؤْسًا قَطُّ؟ هَلْ مَرَّ بِكَ شِدَّةٌ قَطُّ؟ فَيَقُولُ: لَا، وَاللهِ يَا رَبِّ مَا مَرَّ بِي بُؤْسٌ قَطُّ، وَلَا رَأَيْتُ شِدَّةً قَطُّ " (صحيح مسلم - 2807)