HOME      Khutba      பகுதி 2-2 இஸ்லாம் வென்றேதீரும் | Tamil Bayan - 520   
 

பகுதி 2-2 இஸ்லாம் வென்றேதீரும் | Tamil Bayan - 520

           

பகுதி 2-2 இஸ்லாம் வென்றேதீரும் | Tamil Bayan - 520


இஸ்லாம் வென்றே தீரும்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : இஸ்லாம் வென்றே தீரும் (பகுதி 2-2)
 
வரிசை : 520
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 13-04-2018 | 28-07-1439
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
பகுதி ஒன்றின் தொடர்:
 
சிலகாலங்களில் சில தோல்விகள் ஏற்பட்டிருக்கலாம். சில பின்னடைவுகள் நமக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், கண்டிப்பாக முடிவு என்பது மூஃமின்களுக்கு தான் என்பதை மறந்துவிடாதீர்கள். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முன்னறிவிப்பை செய்து, அந்த முன்னறிவிப்புகளில் ஏதாவது ஒன்று பொய்யாகி இருக்கிறதா என்று பாருங்கள். 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நூற்றுக்கணக்கான முன்னறிவிப்புகளை செய்திருக்கிறார்கள். அல்லாஹ்வுடைய தூதருடைய ஒவ்வொரு முன்னறிவிப்புகளும் உண்மையாக நிகழ்ந்து வருவதை பார்த்து கொண்டிருக்கக்கூடிய, அந்த முன்னறிவிப்புகளின் எதார்த்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய முஸ்லிம்களாகிய நாம் எதற்காக பயப்பட வேண்டும், சோர்வடைய வேண்டும். 
 
எதிரிகளின் ஆயுதங்களை, அவர்களது படைகளை பார்த்து, எண்ணிக்கைகளை பார்த்து, அவர்களுடைய வளர்ச்சிகளை பார்த்து நாம் பிரம்மிக்க வேண்டிய அவசியமில்லை. மனம் தளர வேண்டிய அவசியமில்லை. 
 
அல்லாஹு தஆலாவிற்கு அவர்களின் இத்தனை பிரம்மாண்டங்களையும் அழிப்பதற்கு ஒரு நொடி கூட அதிகம் தான். எவற்றையெல்லாம் கட்டி பிரம்மாண்டமாக இந்த உலகையே மிரட்டி கொண்டிருக்கிறார்களோ, மயக்கி கொண்டிருக்கிறார்களோ, அவையெல்லாம் ரப்புல் ஆலமீனுடைய ஆற்றலுக்கு முன்னால் ஒன்றுமில்லை.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
مَثَلُ الَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِ اللَّهِ أَوْلِيَاءَ كَمَثَلِ الْعَنْكَبُوتِ اتَّخَذَتْ بَيْتًا وَإِنَّ أَوْهَنَ الْبُيُوتِ لَبَيْتُ الْعَنْكَبُوتِ لَوْ كَانُوا يَعْلَمُونَ
 
அல்லாஹ்வை அன்றி (சிலைகளையும் இறந்தவர்களையும் தங்களுக்கு) பாதுகாவலர்களாக ஆக்கிக் கொண்டவர்களுக்கு உதாரணம் சிலந்தியின் உதாரணத்தைப் போலாகும். அது (தனக்கு) ஒரு வீட்டை ஏற்படுத்திக் கொண்டது. நிச்சயமாக வீடுகளில் மிக பலவீனமானது சிலந்தியின் வீடே. அவர்கள் (அல்லாஹ்வை அன்றி வணங்குகின்றவற்றின் பலவீனத்தை) அறிந்திருக்க வேண்டுமே! (அல்குர்ஆன் 29 : 41)
 
அல்லாஹ்வினுடைய ஆற்றலுக்கு முன்னால் இந்த உலகத்தில் உள்ள அத்தனை வல்லரசுகளும் சரி, சிலந்தியின் வலையை விட அற்பமானது. அல்லாஹ் அவனது தூதர் மூலமாக நமக்கு கொடுத்த முன்னறிவிப்புகள் நம்பிக்கையை கொடுக்கின்றன.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை இமாம் புகாரி பதிவு செய்திருப்பதை பார்க்கிறோம். பாரசீகத்தின் சாம்ராஜ்யம் அழிந்துவிட்டால், ஆயிரம் ஆண்டுகளாக கட்டி எழுப்பி, மிகப் பெரிய வல்லரசுகளை உருவாக்கி வைத்திருந்த அந்த பாரசீகம், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உண்மையான மூஃமின்களால், சில எண்ணிக்கைகள் கொண்ட அந்த மூஃமின்களின் படையினால் அவர்களிடத்தில் ஆயுதங்கள் இல்லை, மிகப்பெரிய ராணுவ தளவாடங்கள் இல்லை, ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை வீழ்த்துவதற்கு, ஒரு படை சென்றால் அந்த படைக்கு என்னென்ன தேவையோ அதில் நூரிலிருந்து ஒன்று கூட அந்த நபித்தோழர்களிடம் இல்லை. 
 
ஈமானை தவிர, தொழுகையை தவிர, அல்லாஹ்வின் மீது அவர்கள் வைத்திருந்த தவக்குலை தவிர. குர்ஆனை ஓதினார்கள், நபியை நேசித்தார்கள், ஈமான் உள்ளத்தில் இருந்தது, பசி பட்டினியில் சென்றார்கள், உடைந்து போன ஆயுதங்களை கொண்டு சென்றார்கள். அவ்ரத்தை மறைப்பதற்கு கூட ஆடை இல்லாத நிலை. 
 
சில நேரங்களில், தொழுவதற்கு அவ்ரத்தை மறைப்பதற்கு கூட ஆடை இல்லாததால், ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக தொழுவார்கள். அந்த அளவு ஒரு பரிதாப நிலையில், பஞ்சத்தில், மிகப்பெரிய சிரமத்தில் இருந்தவர்களுக்கு, அல்லாஹ் ஸுப்ஹானஹு வதஆலா அந்த மூஃமின்களுக்கு கிஸ்ராவை வீழ்த்தக்கூடிய ஆற்றலை கொடுத்தான் என்றால், அவர்களை பார்த்தவுடன் கிஸ்ராவுடைய இராணுவ தளபதிகள், பேசுவதற்கு பயந்தார்கள். முன்னால் வந்து நிற்பதற்கு பயந்தார்கள். 
 
ஒவ்வொரு தளபதியும் முதலாவதாக நான் தப்பித்து ஓட மாட்டேனா, யார் ருஸ்துமை பாதுகாப்பது, யார் ‘ஹுரூம்ஜ்’ ஐ பாதுகாப்பது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் என்று விரண்டு ஓடினார்கள். அல்லாஹ்வுடைய தூதருடைய இந்த வாக்கை பாருங்கள்.
 
إِذَا هَلَكَ كِسْرَى فلا كِسْرَى بَعْدَهُ، وإذَا هَلَكَ قَيْصَرُ فلا قَيْصَرَ بَعْدَهُ، والذي نَفْسِي بيَدِهِ لَتُنْفَقَنَّ كُنُوزُهُما في سَبيلِ اللَّهِ
 
அந்த கிஸ்ரா பாரசீக சாம்ராஜ்யம் வீழ்ந்துவிட்டால் இனி அடுத்து ஒரு கிஸ்ரா வர மாட்டான். ரோம பேரரசின் ஹேர்குலஸின் கைஸர் அழிந்துவிட்டால், அதற்கு பின்னால் இன்னொரு ரோம பேரரசு வர முடியாது.
 
அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு சமுரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3121.
 
சிரியாவை ஆட்சி செய்து கொண்ட, ரோம் நகரத்தை தலைமையாக வைத்து கொண்டு, அடுத்த தலைநகரமாக டமஸ்கை வைத்து கொண்டிருந்த ரோம பேரரசின் ஆட்சி அதிகாரங்கள் ஒன்றும் இல்லை. 
 
மதீனாவிலிருந்து நபித்தோழர்கள் புறப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி கிடைத்தவுடனேயே, அவர்களுக்கு அங்கே ஆட்டம் கண்டுவிட்டது. அவர்கள் உள்ளங்களில் தோல்வியின் பயம் கவ்விக் கொண்டது. அல்லாஹ்வினுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லக்கூடிய வாக்கு நடந்தே தீரும். 
 
மேலும் அல்லாஹ்வுடைய தூதர் கூறிய ஹதீஸை இமாம் அஹ்மது பதிவு செய்கிறார்கள். “உங்களுக்கிடையே நபித்துவம் இருக்கும், அல்லாஹ் நாடிய அளவு. பிறகு அல்லாஹுதஆலா நபித்துவத்தை உயர்த்திவிடுவான், அவன் நாடும் போது. அடுத்து உம்மத்தினுடைய நிலை எப்படியெல்லாம் மாறும் என்பதை அல்லாஹ்வுடைய தூதர் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லி கொண்டே வந்தார்கள். 
 
பிறகு நபித்துவத்தின் அந்த வழியில் அல்லாஹு ரப்புல் ஆலமீன் உங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை ஏற்படுத்தி கொடுப்பான். கண்ணியமாக வீழ்ந்த முஸ்லிம்கள் ஒரு நாள் எழுந்தே தீருவார்கள். இது அல்லாஹ்வுடைய சத்திய வாக்கு. அது எதன் மூலமாக? சிலர் நினைப்பதை போன்று ஆயுதங்களினால், படை பலங்களை கைப்பற்றி விடுவதனால் அல்ல. முதலாவதாக முஸ்லிம்கள் முஸ்லிம்களாக மாற வேண்டும். 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மேலும் சில வாக்குகளை பாருங்கள். அவர்களிடம் கேட்கப்பட்டது, “அல்லாஹ்வுடைய தூதரே! இரண்டு பெரும் நகரங்கள் ஒன்று குஸ்துன்துனியா, இரண்டாவது தமஷ்க். 
 
இந்த இரண்டு பெரும் நகரங்களில் குஸ்துன்துனியா என்பது துருக்கியினுடைய ஒரு பெரும் நகரம். இந்த இரண்டு நகரங்களில் முதலாவது எது வெற்றி கொள்ளப்படும்? என்று கேட்கிறார்கள். அந்த சஹாபாக்களிடம் இருந்த மனஉறுதியை பார்த்தீர்களா? 
 
அவர்கள் வானத்தினுடைய ரப்பை நம்பினார்கள். அல்லாஹ்வுடைய உதவியை நம்பினார்கள். இப்போது முஸ்லிம்களுடைய நம்பிக்கை எல்லாம் பாழடைந்திருக்கின்றன. அவர்களுடைய நம்பிக்கை யார் வல்லரசாக இருக்கிறார்களோ, யாரிடத்தில் ஆயுதம் இருக்கிறதோ இவர்களையே சார்ந்திருக்கிறார்கள். 
 
அல்லாஹ்விடம் மன்றாடுவதற்கு பதிலாக, இவர்கள் காஃபிர்களிடத்தில் மன்றாடுகிறார்கள். அல்லாஹ்விடம் உதவி தேடுவதற்கு பதிலாக, அல்லாஹ்வின் எதிரிகளிடத்தில் உதவி கேட்கிறார்கள். தங்களை பாதுகாப்பதற்கு இவர்கள் யாரை அணுகுகிறார்கள்? 
 
அல்லாஹ்வுடைய மார்க்கத்தை எல்லாம் விட்டுவிட்டு, மார்க்கத்துக்கு என்ன மாறுபாடுகள் நடந்தால் என்ன என்பதையெல்லாம் விட்டுவிட்டு, வெறும் வசதியான வாழ்க்கை, விரும்பக்கூடிய ஆட்சி அதிகாரம், இதற்காகவே இன்று நாம் வாழக்கூடிய காலகட்டங்களில் பல புரட்சிகளை முஸ்லிம்கள் செய்தார்கள். 
 
அத்தனை புரட்சிகளிளும் முஸ்லிம்கள் சோர்வடைந்தார்கள். மக்கள் இன்று பல முஸ்லிம் நாடுகளில் என்னென்ன புரட்சிகளை செய்தார்கள். அந்த புரட்சியின் பின்னணி, காரணம் என்ன? இஸ்லாம் வேண்டும் என்பதற்காகவா? அல்லாஹ்வுடைய மார்க்கம் ஓங்க வேண்டும் என்பதற்காகவா?
 
அவர்களை பொருத்தவரை இவ்வளவு காலமாக இவர் ஆட்சி செய்தால், அடுத்து எங்கள் கட்சி ஆட்சி செய்ய வேண்டும். மக்களை திறுத்தாமல், மக்களுக்கு ஈமானிய தர்பியத்துகளை கொடுக்காமல், மக்களை ஒழுங்கு படுத்தாமல், மக்களை பிளவு படுத்தி, கிளர்ச்சி சண்டை செய்து, நிம்மதியை குலைத்து அவர்கள் அரேபிய வசந்தத்தை தேடினார்கள். அது வசந்தமாக இருக்கவில்லை. அவர்களின் அழிவாக மாறியிருப்பதை நாம் பார்க்கிறோம்.
 
அல்லாஹ்வின் சோதனை பயங்கரமானது. அல்லாஹ் உடைய தீனுக்கு முஸ்லிம்கள் திரும்பாதவரை, இவர்களை ஏரெடுத்தும் அல்லாஹ் பார்க்க மாட்டான். அல்லாஹ்வுடைய உதவி என்பது, மார்க்கத்தோடு நாம் இருக்கின்ற வரை, அவன் மார்க்கத்திற்காக வாழ்கின்ற வரை, அவனுடைய மார்க்கத்தை மக்களுக்கு மத்தியிலும், நம் வாழ்க்கையிலும் நிலை நாட்டிக் கொண்டு அதன் பக்கம் மக்களை அழைத்து கொண்டிருக்கும் வரைதான். இந்த தீனை முஸ்லிம்கள் விட்டுவிட்டு உலகத்தை தேடி கொண்டால், அல்லாஹு தஆலா உதவ மாட்டான். 
 
அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள், “நீங்கள் இந்த துன்யாவின் வாழ்க்கையை தேடினால், விவசாயம், கால்நடைகள் இப்படியாக உலக செல்வங்களின் பக்கம் நீங்கள் திரும்பி, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை ஓங்க வைப்பதற்க்காக, அதற்கான தியாகங்கள் செய்வதை நீங்கள் விட்டுவிட்டால் அல்லாஹ் உங்கள் மீது இழிவை சாட்டுவான்.”
 
நூல் : முஸ்னது அஹ்மது எண் : 4593,5304, அபூதாவூத்: 3003.
 
எந்த தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஸ்லிம்களுக்கு முஃமின்ளுக்கு வெற்றி உண்டு என்ற வாக்கை சொன்னார்களோ, அல்லாஹ்வுடைய தீன் ஓங்கும் என்ற நற்செய்தியை சொன்னார்களோ, அதே ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், எச்சரிக்கையும் செய்தார்கள்.
 
அல்லாஹ்வுடைய தீனை விட்டுவிட்டு இந்த துன்யா தான் என்று, தன்னுடைய வீட்டை கட்டி எழுப்ப வேண்டும், தன்னுடைய வாழ்க்கை வசதிகளை மேம்படுத்த வேண்டும், மார்க்கத்தை பற்றி அடுத்து பார்த்து கொள்ளலாம் என்கிறார்கள். 
 
இன்று எத்தனையோ பேர் பேசுகிறார்களே, இஸ்லாமிய நாடுகள் இஸ்லாமை ஆதரிப்பதில்லை, இஸ்லாமிய அழைப்பாளர்களுக்கு உதவுவது இல்லை, இஸ்லாமை வளர்ப்பதற்கு முயற்சி செய்வதில்லை என்று சொல்கிறார்கள்.
 
அப்படி சொல்லக்கூடியவர்கள், தங்களுடைய வாழ்க்கையில் அப்படி பார்த்தார்களா? நாம் இஸ்லாமுக்காக என்ன செய்ந்திருக்கிறேன் என்று? என்னுடைய செல்வம் இஸ்லாமிய மார்க்கத்தை வளர்ப்பதற்காக, பரப்புவதற்காக என்ன செய்திருக்கிறேன் என்று பார்க்கிறார்களா? 
 
அங்கே பார்க்கிறார்கள், இங்கே பார்க்கிறார்கள். தன் கண்ணுக்கு தெரிவதில்லை. இஸ்லாமை பிற முஸ்லிம் நாடுகள் மறந்து வாழ்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால், இவர் இஸ்லாமை மறந்து வாழந்து கொண்டிருக்கிறார். எந்த குற்றத்தை முஸ்லீம் நாடுகள் மீது சுமத்துகிறோமோ, அந்த குற்றத்தை நாம் நம்மில் ஒவ்வொருவர் மீதும் சுமத்த முடியும்.
 
காலையில் எழுந்து எதை பற்றி சிந்திக்கிறோம்? தொழுது முடித்து கடை எப்போ திறப்பது என்று சிந்திக்கிறோம். பிறகு மதிய சாப்பாடு எப்போ என்பதை சிந்திக்கிறோம். சாப்பிட்டு முடித்த பின் இரவு வீட்டிற்கு எப்போது என்று சிந்திக்கிறோம். பிறகு சாப்பாடு, பிறகு தூங்குவது பற்றி சிந்திக்கிறோம். 
 
இதை தவிர இந்த மார்க்கத்திற்காக என்ன திட்டங்களை நாம் வைத்திருக்கிறோம். ஒவ்வொருவரும், என்னையும் முற்படுத்தி சொல்கின்றேன், (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும், மன்னிக்க வேண்டும்.) நான் எப்படி வாழ்வது, என்னை எப்படி பாதுகாப்பது, எனது பிள்ளைகளை எப்படி வளர்ப்பது? என்ற சிந்தனைதான். 
 
ஏதோ தீனில் கொஞ்சம் ஒட்டிக்கொண்டால் போதும். மற்றபடி அர்பணிப்புகள், தியாகங்கள் வாழ்க்கையில் என்ன செய்தோம்?
 
பிறரை பார்க்கிறோம், பிறருடைய குறைகளை பார்க்கிறோம், அவர் தீனுக்காக என்ன செய்தார் என்று பார்க்கிறோம்? நான் இந்த தீனுக்காக என்ன செய்தேன்? என்று சிந்திப்பதில்லை.
 
ஒவ்வொருவரும் இந்த நேரத்தில் அல்லாஹ் நாடினால் மரணத்திற்கு முன்னால் குறைந்தது ஒரு நூறு பேரையாவது அல்லாஹ்வினுடைய மார்க்கத்தின் பக்கம் அழைத்து, அவர்களை இந்த மார்க்கத்தின் பக்கம் சேர்க்காமல் நான் மரணிக்க கூடாது என்ற ஈமானிய உறுதி நமக்கு வந்துவிட்டால், அடுத்து அல்லாஹ்வுடைய இந்த தீன் பூமியில் ஓங்கி தானே ஆகும்.
 
இன்று சில அழைப்பாளர்கள், நமது நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ, ஒரு சில நிறுவனங்கள் செய்யும் முயற்சிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்லாமை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். இன்று உலகத்துடைய சர்வே, உலகத்தில் அதிகமாக வேகமாக வரக்கூடிய மார்க்கம் இஸ்லாம். 
 
அதாவது 2070 வந்துவிட்டால், உலகத்தில் முஸ்லிம்கள் தான் மெஜாரிட்டியாக இருப்பார்கள் என்பதாக, மேலை நாட்டுடைய வல்லுநர்கள் கணக்கெடுத்து சொல்கிறார்கள்.
 
எந்த ஃப்ரான்ஸ் இஸ்லாமிய எதிரி நாடாக இருந்ததோ, எங்கே கிருஸ்த்தவத்தினுடைய சாம்ராஜ்யமாக இருந்ததோ, எங்கே ஒரு சில முஸ்லிம்கள் வாழ்வதே சிரமமாக இருந்ததோ, அங்கு இன்று கிறிஸ்துவத்திற்கு அடுத்து மெஜாரிட்டி மார்க்கமாக இஸ்லாம் விளங்கி கொண்டுடிருக்கிறது.
 
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் குறைந்த பட்சம் இருபதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இஸ்லாமிய மார்கத்தில் நுழைந்து கொண்டு இருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் ஒரு சில நாடுகளில் குறைந்த பட்சம் ஒவ்வொரு ஆண்டும் இருபத்தி மூன்றாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இஸ்லாமிய மார்கத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். 
 
இப்படியாக பல கணக்குகளை பார்க்கும் போது நம்முடைய வல்லுநர்கள் சொல்கிறார்கள்: இஸ்லாமிய மார்க்கம் இன்னும் சில ஆண்டுகளில் அந்த ஐரோப்பிய சாம்ராஜ்யத்தை மிகைத்து விடுமோ என்ற அளவுக்கு இருக்கிறது.
 
எந்த அளவுக்கு மாற்றங்கள். ஒவ்வொரு ஐம்பது கிலோ மீட்டருக்கு மத்தியில் முஸ்லிம்களுக்கான பள்ளி. ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தது ஐநூறு நபர்கள் அன்றாடம் தொழுகின்றார்கள். ஒவ்வொரு தெருவிலும் பல மஸ்ஜிதுகள். 
 
லண்டனுக்கு சென்றவர்களுக்கு தெரியும், அங்கே வெள்ளிக்கிழமைகளில், பெரு நாட்களில் பார்த்தால், முஸ்லிம் நாடுகளில் இல்லாத அளவுக்கு முஸ்லிம்களுடைய எண்ணிக்கையை பார்க்கிறோம். 
 
அல்லாஹ்வுடைய வாக்கை, எச்சரிக்கையை புரிந்து கொள்ளுங்கள். ரப்புல் ஆலமீனை பொறுத்தவரை அரபிகளா, அஜமிகளா, வெள்ளையர்களா, கருப்பர்களா என்று பார்க்க மாட்டான். அல்லாஹ்வுடைய மார்க்கத்தை யார் அணைத்தார்களோ, அவர்களை அல்லாஹு தஆலா தன்னுடைய அருளை கொண்டும், உதவியைக் கொண்டும் அணைத்துக்கொள்வான். அதுதான் சட்டம். 
 
நீங்கள் விலகினால் வேறு ஒரு கூட்டத்தை அல்லாஹ் உருவாக்குவான். (அல்குர்ஆன் 47 : 38)
 
அரபுகள் இந்த மார்க்கத்தை புறக்கணித்தால் என்ன, நாம் ஏன் இந்த மார்கத்தை பின்பற்ற கூடாது? இந்த மார்கத்தை பரப்பக் கூடாது? 
 
அரபுகள் என்ன இந்த மார்க்கத்திற்காக வக்கீல்களா? ஏஜெண்டுகளா அவர்கள்? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அரபுகளுக்காக மட்டும் அனுப்பப்பட்டவர்களா? அவர்கள் வழிகெட்டு சென்றால் என்ன? அவர்களையும் திருத்தக்கூடிய ஆசிரியராக நாம் ஏன் மாறக்கூடாது? அல்லாஹ் மாற்றுவான்.
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு நூற்றாண்டை பாருங்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹாஷிம் வம்சத்தில், அரபு வம்சத்தில் அனுப்பப்பட்டார்கள். ஆட்சி அதிகாரம் இருந்தது. ஆட்சி அதிகாரத்தின் பக்கம் திரும்பினார்கள். அடுத்து அல்லாஹுத்தஆலா இந்த இல்மை யாருக்கு கொடுத்தான்? யோசித்து பாருங்கள். இந்த தீனை பாதுகாத்து பரப்பக்கூடிய கல்விமான்களாக யாரை உருவாக்கினான்? 
 
இன்று நாம் பிரபலமாக இஸ்லாமிய அடிப்படை ஆதாரமாக ஆறு நூல்களை பற்றி பேசுகிறோம். இமாம் புகாரியுடைய ஸஹீஹ், இமாம் முஸ்லிமுடைய ஸஹீஹ், இமாம் நஸயீயுடைய நூல், இமாம் இப்னு மாஜாவுடைய நூல், இமாம் அபூதாவூடைய நூல். 
 
இவர்களெல்லாம் யார்? ஆப்கானிஸ்தான், ரஷ்யாவினுடைய ஊர்களில் வளர்ந்தவர்கள். இவர்கள் அரபிகள் அல்ல. நான்கு இமாம்களில், இமாம் ஷாஃபியி, இமாம் மாலிக்கையும் விட்டுவிட்டால், மற்றவர்கள் எல்லாம் அஜமிகளிலிருந்து வந்தவர்கள். ஆயிரக்கணக்கான மார்க்க அறிஞர்களை நாம் உதாரணமாக சொல்லலாம். அவர்கள் அல்லாஹ்வுடைய தீனை படித்து, வளர்த்து பாதுகாத்தவர்கள். 
 
இந்த மார்க்கத்தை அல்லாஹு தஆலா யாருக்கும் குத்தகையாக எழுதி கொடுக்கவில்லை. உனக்கு மார்க்கம் தேவையே தவிர மார்க்கத்திற்கு நீ தேவையில்லை. உன்னுடைய உலக பாதுகாப்பிற்கு, உன்னுடைய மறுமை வெற்றிக்கு, உன்னுடைய சொர்க்கத்திற்கு, நீ அல்லாஹ்வினுடைய பொருத்தத்திற்குரியவனாக ஆகுவதற்கு உனக்கு ஈமான் தேவை, குர்ஆன் தேவை, ரப்பு தேவை, ரஸூலுல்லாஹ்வுடைய சுன்னா தேவை. 
 
அல்லாஹ்வுடைய தீனுக்கு நீ தேவை இல்லை. அல்லாஹ்வுடைய குர்ஆனுக்கு நீ தேவை இல்லை. அல்லாஹ்வுடைய குர்ஆனுக்கு நீ பணி செய்யவில்லை என்றால் என்ன? அல்லாஹ்வுடைய குர்ஆனைப் பற்றி, நபியை பற்றி மக்களுக்கு நீ சொல்லவில்லை என்றல் என்ன? ஆயிரக்கணக்கானவர்களை அல்லாஹ் உருவாக்குவான். 
 
இன்று அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், ஜெர்மனியிலும், ஜப்பானிலும் இன்னும் பல நாடுகளில் இஸ்லாம் பரவியதே, முஸ்லிம்களா சென்று பரப்பினார்கள்? அங்கிருந்து நம் நாட்டிற்கு வந்த, சில முஸ்லிம் நாடுகளுக்கு வியாபாரமாக வந்த, அங்குள்ள சில நல்லவர்களை பார்த்து இஸ்லாமை படித்து விட்டு சென்றவர்கள், அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட அந்த மாற்றம், அவர்கள் சென்று இஸ்லாமை பரப்பினார்கள். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மஸ்ஜிதுகளை உருவாக்கினார்கள்.
 
நாம் நம்மையும் அறியவில்லை, நம் மார்க்கத்தின் வல்லமையும், உயர்வையும் அறியவில்லை. இந்த இஸ்லாமிய மார்க்கம் எவ்வளவு வலுவானது, உறுதியானது, இதனுடைய பலம் எவ்வளவு என்பதையும் நாம் புரியவில்லை. 
 
இன்று உலகத்தில் என்ன நடக்கிறது என்பதையும் நாம் அறியாமல் இருக்கிறோம் என்று சொன்னால், எவ்வளவு அறிவீனர்களாக, அல்லாஹ் கொடுத்த அறிவை பயன்படுத்தாதவர்களாக, வசதி வாய்ப்பை பயன்படுத்தாதவர்களாக இருக்கிறோம். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
 
ஆகவே, சோர்வடையக் கூடிய அவசியம் இல்லை. பலவீனப்பட வேண்டிய அவசியம் இல்லை. கைசேதப்பட வேண்டிய அவசியம் இல்லை. உறுதியாக இருப்போம். நமக்கு அல்லாஹ் என்ன வேலையை கொடுத்தானோ, என்ன பணியை கடமையை நமக்கு கொடுத்தானோ, ஒன்று நம்முடைய வாழ்க்கையில் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பாதுகாப்பது, அல்லாஹ்வுடைய சட்டங்களை பாதுகாப்பது. 
 
இரண்டாவது பயப்படாதீர்கள். மாற்றார்களை பார்க்கும் போது அவர்களுக்கு இஸ்லாமை எடுத்துச் சொல்லுங்கள். நீங்கள் அவர்களில் ஒருவராக கலக்க முயற்சிக்காதீர்கள். உங்களில் அவர்கள் கலக்க முயற்சி செய்யுங்கள். 
 
நம்முடைய முஸ்லிம் வாலிபர்களை பாருங்கள், அவர்களுடைய அடையாளம் எங்கே சென்றது? 10 காஃபிர் பிள்ளைகளோடு நம்முடைய பிள்ளை ஒருவன் இருந்தான் என்றால், அவர்களில் ஒருவனாக தெரிகிறானே தவிர, இவன் முஸ்லிம் என்று அடையாளப்படுத்தி நாம் ஸலாம் சொல்வதற்கு என்ன அடையாளத்தை வைத்திருக்கிறான்? சில இடங்களில் சில மாற்றங்கள் மாறிக்கொண்டு இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் பெரும்பாலான சூல்நிலைகளை நீங்கள் யோசித்து பாருங்கள்.
 
ஆகவே, எந்தவித அச்சமும் இல்லாமல், நம்முடைய மார்க்கம் அவ்வளவு உயர்வானது, அவ்வளவு மதிப்பு மிக்கது. இதில் எதன் மீது அவர்கள் ஆட்சேபனை செய்ய முடியும்? யோசித்து பாருங்கள். 
 
இறந்து விடக்கூடிய, அழிந்துவிடக்கூடிய மலங்களையும், அசுத்தங்களையும் சுமக்கக்கூடிய கடவுள்களையா நாம் வணங்குகிறோம்? ஏக இறைவனான பரிசுத்தமான ஓர் இறைவனை வணங்குகிறோம். 
 
நம் மார்க்க சட்டத்தில் எந்த சட்டத்தில் என்ன முரண்பாடுகளை அவர்கள் சொல்ல முடியும்? அவர்களுக்கு அவர்களில் உள்ள சிந்தனை வாதிகள் இஸ்லாமிய மார்க்கத்தின் ஒவ்வொரு சட்டத்தையும் ஆராய்ந்து, அதனுடைய நன்மைகளை சொல்லியிருக்கிறார்களே. அதை அவர்கள் படித்து பார்ப்பதற்கு உண்டான சிந்தனையை தூண்டுங்கள். 
 
அல்லாஹ்வுடைய மார்க்கம் அவ்வளவு தூய்மையானது, நீதமானது, நேர்மையானது. தைரியமாக அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அல்லாஹ்வின் பக்கம் நேரடியாக அழையுங்கள். அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் பக்கம் வெளிப்படையாக அழையுங்கள். நான் ஏன் முஸ்லிமாக இருக்கிறேன் என்பதற்குண்டான காரணத்தை சொல்லுங்கள்.
 
நம்மில் பலர் என்ன நினைத்து கொண்டிருக்கிறார்கள்? நம்முடைய அப்பா, அப்பாவின் அப்பா முஸ்லிம். எனவே நானும் முஸ்லிமாகி விட்டேன் என்பதாக. 
 
ஏதோ தர்மசங்கடத்தில் இவர் முஸ்லிமாக இருப்பதாக இருக்கிறார்கள். அதனால்தான் எப்போதாவது இஸ்லாமை விட்டு ஓட வாய்ப்பு கிடைத்தால், முதல் ஆளாக இவர் ஓடி விடுவார். 
 
ஏன் இந்த பலவீனம்? நான் ஏன் முஸ்லிமாக இருக்கிறேன்? என்னுடைய தந்தை முஸ்லிம் என்பதாலா? இல்லை. என்னுடைய இஸ்லாமிய மார்க்கம் உண்மை என்பதால். என்னுடைய இஸ்லாமிய மார்க்கம் நீதம் என்பதால். 
 
என்னுடைய மார்க்கத்தில் சொல்லப்பட்ட ஒவ்வொரு ஒழுக்கமும் தன்னிகரற்றது. ஒவ்வொரு மக்களுக்கும் பாதுகாப்பை தரக்கூடியது. உலக சமுதாயத்திற்கு மத்தியில் சமரசத்தையும், நீதத்தையும், நேர்மையையும் நிலைநாட்டக்கூடியது. 
 
எனவே நான் இந்த மார்கத்தில் இருக்கிறேன். நீ ஏன் இதை ஏற்றுக் கொள்ளக்கூடாது? என்று அவர்களுக்கு சிந்தனையை தூண்டுங்கள்.
 
இதைக்கொண்டுதான் நாம் இருக்க முடியுமே தவிர, பலகைகளில் பெயர்களை எழுதி வைத்துக் கொண்டாலோ, நூறு இயக்கங்களை ஆரம்பித்துக் கொண்டு, அந்த இயக்கங்களை பாதுகாக்க கோஷங்களை எழுப்பினாலோ ஒன்றும் செய்ய முடியாது. 
 
இஸ்லாம் ஒன்று தான் உலகத்தில் நிலைத்திருக்கும். எல்லா இயக்கங்களும் அழிந்துவிடும். இஸ்லாமிற்காக பாடுபடுங்கள்! இயக்கத்திற்காக அல்ல! இஸ்லாமை வளர்க்க இஸ்லாமை பரப்ப முயற்சி செய்யுங்கள். அல்லாஹ் உங்களை பாதுகாப்பான். அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான். 
 
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வுடைய தீனை மட்டும் கொள்கையாக, அடிப்படையாக வைத்து வாழ்ந்து, அல்லாஹ்வுடைய தீனின் பக்கம் மக்களை அழைக்கக்கூடிய மக்களாக நம்மை ஆக்கி அருள்புரிவானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/